Home Top Ad

புத்தன் இப்போது இருந்திருந்தால் போதி மரம் கூட விறகாகியிருக்கலாம்! காலம் அவனையும் ‘கரப்ட்’ ஆக்கியிருக்கும் என்பதுதான் நிஜம். அப்படின்னா நாட்...

பழிவாங்கும் விஷால்? பதறும் படவுலகம்!

புத்தன் இப்போது இருந்திருந்தால் போதி மரம் கூட விறகாகியிருக்கலாம்! காலம் அவனையும் ‘கரப்ட்’ ஆக்கியிருக்கும் என்பதுதான் நிஜம். அப்படின்னா நாட்ல நல்லவனே இல்லையா? என்று பொங்குகிற பொதுஜனம், பின்வரும் செய்தியை படித்தால் சூடம் கொளுத்தி சத்தியம் பண்ணும், “இல்ல… இல்லவே இல்ல” என்று!

பல நூறு வாக்குறுதிகளோடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட விஷால், அவற்றையெல்லாம் செய்து முடிக்க இன்னும் இரண்டாண்டு கால அவகாசம் கோரி வருவது தனிக்கதை. அதில் பாதியையாவது செய்து முடித்திருக்கிறாரா என்ற கேள்விக்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் சங்க உறுப்பினர்கள். சங்கத்திற்குள் நடக்கும் சண்டை சச்சரவுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். அதைவிட முக்கியமான பஞ்சாயத்து இது.

தன்னை எதிர்த்து ஆரம்பகாலத்திலிருந்து குரல் கொடுத்து வரும் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியின் படத்திற்கு சங்கு ஊதுகிற வேலையை முடுக்கி விட்டிருக்கிறாராம் விஷால். சங்க உறுப்பினர்கள் கூடி கூடி விவாதிக்கும் விஷயம் ஆகியிருக்கிறது இது. இதே சுரேஷ் காமாட்சி இயக்கியிருக்கும் ‘மிக மிக அவசரம்’ என்ற படம் கோடம்பாக்கத்திலிருக்கும் அத்தனை நல்ல படைப்பாளிகளையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. படம் பார்த்த அத்தனை பேரும் இன்னொரு அருவி அறம் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இப்படியொரு நல்ல படத்தை வாங்கி வெளியிட வேண்டும் என்கிற விருப்பமும் கூடவே எழும் அல்லவா? அப்படிதான் இப்படத்தை ஒரு தயாரிப்பு நிறுவனம் வாங்கி வெளியிட முன் வந்தது. முறையான ஒப்பந்தமும் போடப்பட்டது. அதற்கப்புறம் நடந்ததுதான் பெரும் அதிர்ச்சி. சில தினங்களுக்கு முன் சுரேஷ் காமாட்சிக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஒரு கடிதம் அனுப்பினார் அந்த தயாரிப்பாளர். ‘மிக மிக அவசரம் படத்தை வெளியிட முடியாமைக்கு வருந்துகிறேன்’ என்பதுதான் கடிதத்தின் சாரம்சம். தனிப்பட்ட முறையில் சுரேஷ் காமாட்சிக்கு போன் அடித்தவர், இந்த படத்தை வெளியிடக்கூடாதுன்னு விஷால் தரப்புல கேட்டுக்கிட்டாங்க. அதனால்தான் மறுக்க வேண்டியதாப் போச்சு என்று கூறியிருக்கிறார்.

இந்த படத்தை வாங்கி வெளியிட முன் வந்த மேலும் இருவரையும் விஷால் தரப்பு தடுத்து வருகிறதாம். நான் சங்கத்தின் பொறுப்புல இருக்கிற வரைக்கும் மிக மிக அவசரம் வருதா பார்த்துடலாம் என்று விஷால் கூறி வருவதாகவும் சொல்கிறார்கள்.

ஒரு நல்ல படத்தை தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக தடுப்பது தமிழ்சினிமாவுக்கு செய்கிற துரோகம். அதை விஷால் தன் மனமறிந்து செய்திருக்க மாட்டார் என்று இந்த நிமிஷம் வரைக்கும் நம்புகிறது கோடம்பாக்கம்.

0 coment�rios: