Home Top Ad

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன...

'விஸ்வரூபம்' முதல் ‘விஸ்வரூபம் 2’ வரை- ரசிகனையும் தொண்டனையும் திருப்திபடுத்துவாரா கமல்ஹாசன்?

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் நாளை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், அவரே இயக்கி, தயாரித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘விஸ்வரூபம்’. சர்வதேச தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம், வெளியீட்டிற்கு முன் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது.

தடைகளை உடைத்து சரித்திரம் படைத்தவன்:

படத்தில் முஸ்லீம் மதத்தவர்களை தவறாக சித்தரித்ததாக தெரிவித்து, சில முஸ்லீம் அமைப்பினர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் சில நாட்களுக்கு பின்னரே விஸ்வரூபம் வெளியிடப்பட்டது. இருப்பினும், படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் பேராதரவை பெற்று, மிகப்பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. படத்தின் இறுதியில் அதன் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகள் டிரைலராக காட்டப்பட்டு, விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.



2015 இல் கலக்கிய கமல்:

ஆனால், நிதிப் பிரச்சனையால் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தடைப்பட்டது. இதனிடையில், நடிகர் கமல்ஹாசன் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தமவில்லன் (2015), ஜித்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் (2015), சி.கே.திவாகர் இயக்கத்தில் தூங்கா வனம் (2015) உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதில் பாபநாசம் திரைப்படம் மட்டும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியைப் பெற்றது.

சபாஷ் நாயுடு:

இந்தப் படங்களைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் படத்தில் வந்த காமெடி கதாபாத்திரமான நாயுடுவை வைத்து சபாஷ் நாயுடு படத்தை இயக்க முயற்சித்தார். ஆனால், அந்தப் படமும் நிதிப்பிரச்சனையால் பாதியிலேயே தடைப்பட்டது.

பிக்பாஸும் பிரச்சனைகளும்:

பிக்பாஸ் கமல்ஹாசன்

இதற்கிடையில்தான் வெளியானது பிக்பாஸ் என்ற ரியாலிட்டு ஷோ. ஏற்கனவே பல மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த இந்த ஷோவை, தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார், அவரின் பேச்சுப் புலமை இந்த நிகழ்ச்சி வெற்றிப் பெற மிகப்பெரிய அளவில் உதவியது.

அதுவரையில், சமூகப் பிரச்சனைகளுக்கு நடிகனாக குரல் கொடுத்து வந்த கமல்ஹாசன். அந்த சமூகத்தில் உள்ளவர்களில் ஒருவராக, அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை வைக்கத் தொடங்கியது இந்த நிகழ்ச்சியில்தான்.

முதலில், தமிழ் கலாச்சாராத்திற்கு எதிராக உள்ளது என ஆரம்பித்த பிக்பாஸ் பிரச்சனை, படிப்படியாக உருவெடுத்து, கமலுக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் இடையேயான பிரச்சனையாக மாறியது. இதனால், கமலுக்கும் தமிழக அமைச்சர்களுக்கும் இடையே கருத்துப் போர் உண்டானது. இதன் விளைவாக, நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

விஸ்வரூபத்துடன் விஸ்வரூபம் எடுத்த மக்கள் நீதி மய்யம்:

இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் பாதியில் நிறுத்தப்பட்ட ‘விஸ்வரூபம் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார். அதே வேளையில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி, மதுரையில் நடந்த மாநாட்டில், சொன்னபடி ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கி, அதன் கொடியையும் அறிமுகப்படுத்தினார். ஒருபுறம் ‘விஸ்வரூபம் 2’ மறுபுறம் மக்கள் நீதி மய்யம் இரண்டையும் ஒருசேர கட்டமைத்தார் கமல்ஹாசன்.


தற்போது, ‘விஸ்வரூபம் 2’ படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி(நாளை) வெளியாகிறது. கடந்த முறையை போல் இல்லாமல், இம்முறை படத்திற்கு பிரச்சனைகள் அந்த அளவிற்கு இல்லை என்றாலும், படம் வெளியான பின் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என எதிர்பார்க்கப்படுகிறது.


முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தியுள்ள நடிகர் கமல்ஹாசன், அரசியலுக்கு வந்த பின் வெளியாகும் முதல் திரைப்படம் ‘விஸ்வரூபம் 2’. தற்போது கமல்ஹாசனுக்கு நடிகனாக தனது ரசிகனை மட்டுமில்லாமல், ஒரு தலைவனாக தனது தொண்டனையும் இப்படத்தில் திருப்தி படுத்த வேண்டியுள்ளது. அதை அவர் எந்த அளவிற்கு செய்கிறார் என்பதை படம் வெளியான பின்னரே அறிய முடியும். 

0 coment�rios: