Home Top Ad

கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை, கடந்த பல ஆண்டுகளாகவே மத்திய அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. இவற்றின் உற்பத்தி, விலை நிர்...

"இனி எல்லா வீடுகளிலும் சிறுதானியம்!" - அரசின் அறிவிப்புக்குப் பெருகும் வரவேற்பு

கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட சிறுதானியங்களை, கடந்த பல ஆண்டுகளாகவே மத்திய அரசு கண்டுகொள்ளாமலே இருந்தது. இவற்றின் உற்பத்தி, விலை நிர்ணயம், சந்தை வாய்ப்புகள் உள்ளிட்ட எதிலும் ஆட்சியாளர்கள் ஆர்வம் காட்டாமலே இருந்துவந்தார்கள். தற்போது, பொதுமக்களிடம் சிறுதானியங்கள்குறித்த விழிப்புஉணர்வு நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், தற்போது மத்திய அரசு இதில் சிறப்புக் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் கம்பு, கேழ்வரகு, சோளம், தினை உள்ளிட்ட சிறுதானியங்களைச் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என சமீபத்தில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் அறிவித்தார். பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்களைச் சேர்ப்பது தொடர்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிதி ஆயோக் மற்றும் மத்திய வேளாண்மைத் துறையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறுதானியங்கள்குறித்த பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. நிதி ஆயோக் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்களை வழங்க மத்திய வேளாண்மைத் துறை திட்டமிட்டுள்ளது. 2018-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாகவும் அறிவித்துள்ளது. 


சிறுதானியம்

இதற்கு, பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வரவேற்பு பெருகிவருகிறது. தமிழ்நாட்டில் சிறுதானியம் சாகுபடியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாமரர் ஆட்சியர் கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் சரவணன் இதுகுறித்து நம்மிடம் பேசும்போது, ‘50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் பரவலாக அதிக அளவில் சிறுதானியங்கள் சாகுபடிசெய்யப்பட்டு வந்தது. நம் முன்னோர்களின் முதன்மை உணவாகவே கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் திகழ்ந்தன. காலப்போக்கில், அடுத்தடுத்த தலைமுறையினரின் உணவுப் பழக்கம் மாறியதால், விவசாயிகள் இவற்றை சாகுபடிசெய்வதைக் கைவிடத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் சிறுதானிய பயிர்களைப் பார்ப்பதே அரிது என்ற நிலை உருவாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில்தான் நம்மாழ்வார் மற்றும் பசுமை விகடனின் தொடர் முயற்சிகளால் சிறுதானியச் சாகுபடி புத்துயிர் பெறத் தொடங்கியது. கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, குதிரை வாலி, வரகு ஆகியவற்றின் சாகுபடி முறைகள்குறித்தும் இதன் மகத்துவம்குறித்தும் விரிவான கட்டுரைகள் வெளியாகின. சிறுதானியங்களை எப்படியெல்லாம் விதவிதமாக சமைக்கலாம் என அவள் விகடன் ஆர்வத்தை உருவாக்கியது. சிறுதானிய உணவுத் திருவிழாவும் நடத்தி, மக்களின் கவனத்தை ஈர்த்தது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் முயற்சிகளாலும் சிறுதானியம்குறித்த விழிப்புஉணர்வு அதிகரித்துவருகிறது. இதனால், மத்திய மாநில அரசுகளின் கவனம் சிறுதானியங்களின் பக்கம் திரும்பியுள்ளது. ரேஷன் கடைகளில் சிறுதானியம் வழங்கப்பட்டால், இதைப் பயிர்செய்யும் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும். வெளிச் சந்தையிலும் சிறுதானியங்களின் கொள்முதல் விலை உயர்வதோடு, சந்தை வாய்ப்புகளும் பெருகும். இதனால், சிறுதானிய சாகுபடி பரப்பு அதிகரிக்கும்” என்றார்.

பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து, ‘சிறுதானியங்கள் ஏழைகளின் உணவாக இருந்தது. அவர்களிடம் அரிசியைப் புகுத்தி. சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள் நாளடைவில் கைப்பற்றப்பட்டன. தற்போது, பணக்காரர்களின் உணவாக இவை உள்ளன. பொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியங்கள் வழங்கப்பட்டால், மீண்டும் ஏழைகளின் உணவாக இவை மாறும். இதனால், அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக சிறுதானியங்கள் கிடைக்கும். மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.” என்றார்.

சிறுதானியங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர் ஒருவர், ’’நாளுக்குநாள் வெப்பம் அதிகரித்துவருவதால், நெல் சாகுபடியில் மகசூல் குறைந்துகொண்டேவருகிறது. சிறுதானியங்கள் மட்டுமே வறட்சியைத் தாங்கி வளரக்கூடியன. அதே சமயம், மக்களிடம் சத்துக் குறைபாடுகள் அதிகரித்து, பல்வேறு நோய்கள் தாக்குகின்றன. இதனால்தான், சிறுதானியங்களை மத்திய மாநில அரசுகள் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளன. இவற்றை சாகுபடிசெய்யும் முறைகள்குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதோடு மட்டுமல்லாமல், இவற்றை மதிப்புக்கூட்டுவதற்கான இயந்திரங்கள் எல்லா இடங்களிலும் பரவலாகக் கிடைக்கவும் அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என்றார்.  

0 coment�rios: