Home Top Ad

மிருதன் புகழ்(?) சக்தி சவுந்தர்ராஜனின் மூன்றாவது படம். ஸ்பேஸ் பற்றிய கதையை சில பல ஆங்கில படங்களிலிருந்து அபேஸ் பண்ணி ‘அடித்த’ படம்தான் டிக்...

டிக் டிக் டிக் / விமர்சனம் - அடுத்த படம் எந்த இங்கிலீஷ் படம்ணே…? அதை நினைச்சாதான் டிக்டிக்டிக்குங்குது மனசு!

மிருதன் புகழ்(?) சக்தி சவுந்தர்ராஜனின் மூன்றாவது படம். ஸ்பேஸ் பற்றிய கதையை சில பல ஆங்கில படங்களிலிருந்து அபேஸ் பண்ணி ‘அடித்த’ படம்தான் டிக்டிக்டிக்! ‘அடிச்சதுதான் அடிச்சீங்க. அடிமூளை கிறுகிறுக்கிற அளவுக்கு அடிச்சிருக்க வேணாமா?’ என்று ரசிகர்கள் முணுமுணுத்தாலும், தமிழ்சினிமாவை பொறுத்தவரை இந்தப்படம் புத்தம் புது அனுபவம்தான். மறுப்பதற்கில்லை!

பூமியை நோக்கி வரும் விண்கலம் ஒன்றை வானத்திலேயே வைத்து உடைக்காவிட்டால் தமிழ்நாட்டில் நாலு கோடி மக்கள் காலி. என்ன செய்வது? எப்படி நொறுக்குவது? பலவாறாக மண்டையை குடையும் அதிகாரிகள் குழு, ஐவர் குழுவை தேர்ந்தெடுத்து ஸ்பேஸ்சுக்கு அனுப்புகிறது. (அந்த அதிகாரிகள் விஞ்ஞானிகளா, இராணுவத்தினரா…) அதில் மூவர் திருடர்கள். அதிலும் ஒருவர்தான் ஹீரோ ஜெயம் ரவி.

தானுண்டு தன் ஜெயில் தண்டனை உண்டு என்று இருக்கும் அவருக்கு, மேஜிக்கும் கைவந்த கலை. இப்படியாக கிளம்பிப் போகும் ஐவர் குழு, எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுகிறது என்பதுதான் டிக்.டிக்.டிக்.

சரியாக ராக்கெட் மேலே கிளம்புகிற நேரம் பார்த்து “உன் மகனை கடத்திட்டோம். அந்த மிசைல் எங்கிட்ட வந்தாகணும்” என்று வில்லன் எச்சரிக்க, மிசைலை வைத்து விண்கலத்தை உடைப்பதா? வில்லனிடம் கொடுப்பதா? எக்கச்சக்கமாக ஒரு முடிச்சை போடுகிறார் டைரக்டர். அதைவிட பெரிய முடிச்சு நமது மண்டைக்குள். 400 டன் எடையுள்ள அந்த மிசைலை எப்படி யாருக்கும் தெரியாமல் வில்லனிடம் ஒப்படைக்க முடியும்? அந்த வில்லனே ராக்கெட்டின் பெட்ரோல் டேங்கை திறந்துவிடு என்று கூறினால், ராக்கெட் எப்படி மேலே போகும்? போனால்தான் மிசைல் ஹீரோவுக்கு கிடைக்கும்? ஹீரோ வில்லனுக்குக் கொடுப்பான்? அப்படியிருக்க… ஏன் இப்படி சொன்னான் வில்லன்? இப்படியெல்லாம் கேள்விகள் கிளம்பி மண்டை நரம்பு சூடேறுகிறது. போய் தொலையட்டும்…

ஜெயம் ரவியை மட்டுமாவது ரசிக்கலாம் என்றால், மனுஷன் எந்நேரமும் கடுப்பு ராசாவாகவே இருக்கிறார். நல்லவேளை… மொக்கை ஜோக்குகளாக அடித்துத்தள்ளி சற்றே ரிலாக்ஸ் ஆக்குகிறார்கள் ரமேஷ் திலக்கும், அர்ஜுனும்.

இருந்தாலும், ராக்கெட்டில் பயணிக்கிறோம். அதுவும் நாலு கோடி மக்களை காப்பாற்ற என்கிற சிந்தனை சிறிதும் இல்லாமல், டாஸ்மாக் சரக்கோடு அவர்கள் மேலே போகிறார்கள் என்பதெல்லாம் ஜோக்குக்காக என்றாலும், சொரேர் என்கிறது. நல்லா சிந்திக்கிறீங்க சக்தி சவுந்தர்ராஜன். .

படத்தில் ஒரு சீன். ரமேஷ்திலக், அர்ஜுன் காமெடியையெல்லாம் தூக்கி சாப்பிடுகிறது. ‘இந்த சீக்ரெட் ஆபரேஷுனுக்கு ஒரு திருடனை அழைச்சிட்டு போகணுமா?’ என்று கேட்கும் சக அதிகாரிகளுக்கு அவன் திறமையை புரிய வைக்கிறாராம் மேலதிகாரி. எப்படி? பெரிய பெட்டகம் ஒன்றை திறக்கிற பொறுப்பை ஒப்படைக்கிறார் நிவேதா பெத்துராஜ் மற்றும் வின்சென்ட் அசோகனிடம். அவர்கள் மிஷின் கன்களால் சுட்டுமே திறக்காத பெட்டகத்தை அடுத்த அரை நிமிஷத்தில் ஒரு கை அகல வெற்றுத்தாள் மூலம் சாதிக்கிறார் ஜெயம் ரவி. (ஸ்….யப்பா மிடியல)

அந்த விஞ்ஞானிகள் குழுவில் நிவேதா பெத்துராஜும் இருக்கிறார். அந்த ராணுவ உடையும் நச்சென பொருந்தியிருக்கிறது அவருக்கு. மற்றபடி அதிக வேலையில்லை பொண்ணுக்கு.

ஜெயப்ரகாஷ்தான் வில்லன். அவ்ளோ பெரிய அப்பாடக்கர், சின்னூன்டு பையனிடம் அகப்படுவதுதான் இந்தப்படத்தின் ஆகப்பெரிய காமெடி சீன்.

நைந்து போன திரைக்கதைக்கு கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி உயிர் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக். அதையும் உப்புமா கிண்டி வைக்காமல் அர்ப்பணிப்போடு பணியாற்றி படத்தையே காப்பாற்றியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் எஸ்.எஸ்.மூர்த்தி. இவருக்கு சற்றும் சளைக்காத உழைப்பு ஒளிப்பதிவாளர் எஸ்.வெங்கடேஷ் மூலம் அமைந்திருக்கிறது. படம் தப்பித்ததென்றால் அதற்கு முழு முதல் காரணம் இவ்விருவர்தான்.

குறும்பா… பாடலில் மெய்மறக்க வைக்கிறார் டி.இமான். அவருக்கு இது 100 வது படம். வெற்றி நடை தொடர்க…

அரைத்த மாவையே அரைக்கக் கூடாது என்கிற ஒரு கொள்கைக்காக டைரக்டர் சக்தி சவுந்தராஜனை பாராட்டலாம். அடுத்த படம் எந்த இங்கிலீஷ் படம்ணே…? அதை நினைச்சாதான் டிக்டிக்டிக்குங்குது மனசு!

0 coment�rios: