Home Top Ad

'நீயா நானா கோபிநாத்' - இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.  'நீயா நானா' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இன்று உலகம் முழுக்க...

"மகிழ்ச்சியாளராக இருந்தால்தான் வெற்றியாளராக முடியும்!’’ - ஸ்ட்ரெஸ் ரிலீஃபுக்கு `நீயா? நானா?’ கோபிநாத் டிப்ஸ்!

'நீயா நானா கோபிநாத்' - இவரை அறியாதவர்கள் இருக்க முடியாது.  'நீயா நானா' தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் இன்று உலகம் முழுக்க இருக்கும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்பவர். ஆழமாகவும், ஆர்வம்  குறையாமல் பிறர் கேட்கும் வகையிலும் பேசுவதில் வல்லவர். மன அழுத்தம் ஏற்பட்டால், எந்தெந்த வழிமுறைகளைக் கையாண்டு அதிலிருந்து விடுபடலாம் என்பது குறித்து விளக்குகிறார் கோபிநாத்...

``மன அழுத்தத்தைப் பத்தி  இன்னிக்கி நாம பேசக்கூடிய விஷயங்கள்தான் அதிகமாக  மன அழுத்தத்தை உண்டு பண்ணுதோனுகூட ஒரு வியூ இருக்கு. எல்லா காலகட்டத்திலுமே மனுஷனுக்கு மன அழுத்தம் ஏற்படுறது உண்டு. ஆனா, அதை ஒரு மனுஷன் எப்படி எடுத்துக்கிறான்கிறதுதான் முக்கியம்.  எளிதாக அதைக் கடந்துபோவது ஒண்ணு. மன அழுத்தங்கிறதுக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து சிக்கலாக்கிக்கொள்றது இரண்டாவது வகை.  உலகம் பரபரப்பாக இயங்குகிறபோது, மனிதன் தன்னை எப்படி ஒழுங்குபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிற கருத்தியல்கள் இயல்பாகவே ஏற்படும். அதில் ஒன்றுதான், நம் மனத்தை நாம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும்.  மன அழுத்தம் ஏற்படுவதற்கு சில காரணங்கள் இருக்கு. அவரவர் சார்ந்திருக்கும் வேலை; அவரவரின் புறச்சூழ்நிலைகள் மற்றும் அவரது 'அகம்' என்னும் மனம்.

அந்த மனம், அதனுடைய கேரக்டர்... அது எவ்வளவு தூய்மையாக இருக்குங்கிறது ஒரு முக்கிய விஷயம். அதில் நாம் என்னென்ன விஷயங்களைத் தேக்கிவைத்து சிக்கலாக்கிக்கொள்கிறோம்கிறது, இன்னும் முக்கியம்.
மன அழுத்தம்கிறது ஏதோ வெளியிலேர்ந்து வந்து நம்மைத் தாக்குதுங்கிற ஒரு பிம்பத்தை நாமாகக் கட்டமைச்சுக்கிட்டு, 'மலையில போய் தியானம் பண்றது', 'கோயில்ல போய் உட்கார்ந்திருக்கிறது', 'கதவைச் சாத்திக்கிட்டு அமைதியாக இருக்கிறது', 'சோகப் பாடல்கள் கேட்கிறது'னு நாமே ஒரு  ஸ்டேண்டர்டு ஆஃப் லிஸ்ட் இருக்குற ஒரு டெம்ப்ளேட் வெச்சிருக்கோம். அப்படியெல்லாம் மன அழுத்தத்துக்கு நிரந்தரமான தீர்வு இருக்கானு தெரியலை.

முதல்ல மன அழுத்தத்தை வெளியில இருந்து பார்க்கிறதைவிட நமக்குள்ள, அகம் சார்ந்து பார்க்கிறதுங்கிற வழிமுறையை நாம் கையாண்டால் நன்றாக இருக்கும். நம்ம மனசு எவ்வளவு சுத்தமா இருக்கு? முதல் கேள்வியா இதை நாம கேட்டுக்கணும்.
மன அழுத்தம்கிறது தேவையான காரணங்களுக்காகத்தான் வருதானு முதல்ல பார்க்கணும். நமக்கு இருக்கும் பொறுப்புகள், வேலைகள், பொருளாதார நெருக்கடிகள், நம் எதிர்காலக் கடமைகளுக்காக அது வருதுன்னா தப்பில்லை. இருக்கட்டும். அந்த மன அழுத்தம்தான் ஒரு மனுஷனை அடுத்தநிலைக்கு எடுத்துக்கிட்டுப்போகும்.

எவனோ ஒருத்தனுடைய வெற்றி நமக்கு மன அழுத்தம் கொடுக்குதுன்னா அது நம்ம சிக்கல்தானே ஒழிய, அவன் சிக்கல் இல்லை. நமக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்துக்காக பொறாமையின் காரணமாக நமக்கு மன அழுத்தம் வருதுன்னா நம்ம மனசைத்தான் நாம சரி பண்ணணுமே தவிர, மன அழுத்தத்தைச் சரிபண்ண முடியாது.  மனதைச் சரிசெய்வதன் மூலமாகத்தான் மன அழுத்தத்தைச் சரிசெய்ய முடியும். மன அழுத்தம்கிறது வெறும் ரீ- ஆக்‌ஷன் மட்டும்தான். கடந்த 25 ஆண்டுகளாக இதற்குத்தான் நாம பதில் சொல்லிக்கிட்டிருக்கோம். ஆனால், அதனுடைய வேர் என்னங்கிறதைத்தான் பார்க்கணும்.

என் மனசளவுல எந்த அளவுக்கு நான்  சுத்தமா இருக்கேங்கிறதுதான் மிக முக்கியமான முதல் கேள்வி. அது இல்லாதபட்சத்துல சிக்கல்கள்தான் உண்டாகும். வேலை காரணமாக உங்களுக்கு ஒரு சின்ன பிரஷர் இருக்குன்னா அதை உள்வாங்கிக்கங்க. அதுதான் உங்களை அடுத்த லெவலுக்கு எடுத்துக்கிட்டுப் போகும். இன்னிக்கு எல்லாருக்குமே அவங்கவங்க லெவலுக்கு ஸ்ட்ரெஸ் இருக்கு. ஸ்ட்ரெஸ்ங்கிறதை வேற மாதிரியும் எடுத்துக்கலாம். அது நாம பார்க்கும் வேலையாக இருந்தால் அதைப் பத்திக் கவலைப்படாதீங்க. அதுதான் உங்களுடைய பொறுப்பு. அது குறித்து உங்களுக்கு இருக்கிற பயம் நல்லது. ஆனால், அந்தப் பயம் அதிகமாகிவிடக் கூடாது.

அடுத்தவங்களோட கம்பேர் பண்ணி பார்த்துட்டு, அடுத்தவனோட வெற்றியாலே நமக்கு ஸ்ட்ரெஸ் ஏற்பட்டுச்சுன்னா அது தப்பு. 'அவனுக்கு உண்டானது அவனுக்கு... நமக்கு உண்டானது நமக்கு'னு போயிடணும். அவனைப்போல நாமும் வெற்றி பெறணும்னா நம் மன அமைப்பைத்தான் மாத்திக்கணும்.

'எதிர்த்த வீட்டுக்காரன் கார் வாங்கிட்டான்; பக்கத்து வீட்டுக்காரன் வீடு கட்டிட்டான்; நம்ம சொந்தக்காரங்க எல்லாம் நல்லா இருக்கானுங்க; நாம மட்டும் இப்படியே இருக்கோம்'னு நினைச்சோம்னா அங்கே வந்து மன அழுத்தம் உட்கார்ந்துக்கும். இப்படி நமக்கு ஏற்படுற இந்த மனஅழுத்தத்தை 'ஸ்ட்ரெஸ்'ங்கிற பேர்ல பூதாகரப்படுத்துறாங்க. ஸ்ட்ரெஸ்ங்கிறதைவெச்சு இப்போ மிகப் பெரிய அளவுல வணிகம் நடக்க ஆரம்பிச்சிடுச்சு. ஸ்ட்ரெஸுக்குத் தீர்வாக உங்களைத் தனிமைப்படுத்திக்கிட்டு, வித்தியாசமான வழிமுறைகள் மூலமாகத் தீர்வு கிடைக்கும்கிறதை நான் நம்பலை. உளவியல்ரீதியாக எனக்குத் தெரியாது.

இயல்பாகவே எனது பணியின் காரணமாக, சமூகத்தின் பல அடுக்குகளில் வாழும் பலதரப்பட்ட மனிதர்களை நான் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கிறதால நான் சொல்றேன்... ஒரு கூட்டுச் சமூகமான இந்தச் சமூக அமைப்புல மனிதர்களுடன்தான் பழகணும்.
வழக்கமாக செய்கிற காரியங்களைச் செய்யாமல், மற்றவர்களுக்கு மன மகிழ்ச்சி தரும் செயல்களைச் செய்ய ஆரம்பிச்சாலே, உங்களுடைய மன அழுத்தம் தானாகப் போய்விடும். ஆனால், நமக்கு மனநிறைவைத் தருகிறச் செயல்களைச் செய்தால்தான் மன அழுத்தம் போகும் எனத் தவறாக நினைத்துக்கொள்கிறோம்.

நமக்கு மனநிறைவைத் தருகிற செயல் எதுன்னு தெரிஞ்சிட்டாலே, நமக்கு மன அழுத்தம் வராது. ஆனால், மன அழுத்தத்தை பிசினஸ் மாதிரி ஆக்கிட்டாங்க.

`இன்னிக்கு பொறந்த குழந்தையில் இருந்து வயசானவங்க வரைக்கும் ஸ்ட்ரெஸ் இருக்கு. இது போகணுமா? எங்கக்கிட்ட வாங்க. நாலு நாள்  பேக்கேஜ்ல டூர் போங்க'னு சொல்றாங்க. 'எங்க முகாமுக்கு வாங்க’ங்கிறாங்க. `எங்க ஃபுட்டை சாப்பிடுங்க'னு பிசினெஸா பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.செயற்கையாக ஏற்பட்ட மன அழுத்தத்துக்கு செயற்கையான தீர்வுகளைத் தேடிப்போகிற நிலைதான் இங்கே இருக்கு. அதெல்லாம் தேவையே இல்லை. இதற்கான தீர்வு இங்கேயே இருக்கு.

உங்களுக்கு ரொம்ப மன அழுத்தமா இருக்கா? ஒண்ணும் வேணாம். வீட்டுல ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துல இருக்குறவங்களோட சந்தோஷமா மனம்விட்டுப் பேசுங்க. ஒரு ஆணாக இருக்கும்பட்சத்தில் உங்க குழந்தைக்கு, மனைவிக்கு  நீங்க சமைச்சுப்போடுங்க. அதுவே பெரிய ரிலாக்சேஷனாக இருக்கும்.

மூணு வேளையும் நல்ல சோறு கிடைக்காம, எத்தனையோ  விவசாயிங்க  நித்தமும் செத்துப் பிழைக்கிறாங்க. பட்டினி கிடக்கிறாங்க. நம்மால் வெளியில தலைக்காட்ட முடியாத வெயில்லதான் வியர்வை வழிய,  தார் ரோட்டுல பலர் வேலை பார்க்கிறாங்க. அவங்களுக்கில்லாத மன அழுத்தம் நமக்கு என்ன இருக்கப் போகுது?

`நம்ம குழந்தை எதிர்காலத்துல என்னவா ஆகப் போகுதோ?’னு நினைக்கிற பேரன்ட்ஸுக்கு இல்லாத மன அழுத்தம் அந்தப் பிள்ளைக்கு என்ன வந்திடப் போகுது? அதாவது, வளர வளர `கஷ்டப்பட்டுக் கவலைப்படுறது’ங்கிற இடத்துக்கு நாம வந்துட்டோம். மன அழுத்ததுக்குத் தீர்வாக நீண்டகாலமாக நம்பிக்கிட்டு இருக்கிற விஷயத்துக்கு எதிராக நான் பேசுறதா நினைக்காதீங்க.
மன அழுத்தம் நம்மோட இலக்குல ஃபோகஸ் குறையும்போது வரும். இலக்கு இல்லாதபோது நமக்கு பயம் வரும். அந்த பயத்தை வெல்வது எப்படி?

நம்ம வாழ்க்கைக்குள்ளேயே, மன அழுத்தத்தைப் போக்கக்கூடிய செட்அப் இருந்துச்சு. ஆனா, அதை நாம கொஞ்சம் கொஞ்சமா துண்டிச்சிட்டோம். நம்ம உலகம், நம்ம ஆபீஸ், நம்முடைய கேபின்-னு இருக்க ஆரம்பிச்சிட்டோம்.
உலகம் கைக்குள்ள வந்துடுச்சு. அமெரிக்காவுல இருக்கிறவங்களோட ரொம்ப ஈஸியாப் பேசுறோம். ஆனா, நம்ம ஃப்ரெண்ட்ஸோட பேச மறந்துப் போயிடுறோம். அவங்க எண்ணிக்கையும் குறைஞ்சிடுச்சு. உறவுகள் சுருங்கிப் போச்சு. சொந்த ஊர்ல நடக்கிற நல்லது கெட்டதுக்குப் போயிட்டு வர்றது குறைஞ்சிடுச்சு. 'என்னடா பண்றே... சும்மாதான் இருக்கியா... வீட்டுக்கு வாடா'ங்கிற டயாலாக்கே குறைஞ்சு போச்சு.

மனிதர்கள் ஓர் இடத்தில் ஒன்றாகக் கூடும்போது லைஃபில் ஒரு கூட்டமைப்பு உருவாகும். தனித் தனியாகப் போகும்போது  மனச்சுமை குறையாது. அதனாலதான் கல்யாணம், காதுகுத்து, திருவிழாவிலெல்லாம் மனிதர்கள் ஒன்றாகக் கூடினார்கள்.
`கவலைப்படாதே மாப்ளே! உன் பிரச்னையை என்கிட்ட விடு. நான் பார்த்துக்கிறேன்'னு மாமா சொல்றார்னா, அவர் தீர்த்துவைக்கிறாரோ இல்லையோ நமக்கு அதுல ஒரு தெம்பு கிடைக்கும்.

சமீபத்துல உறவுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சியில, `உங்களால மறக்க முடியாத வார்த்தை எது?’னு கேட்டப்போ ஒரு அம்மா, 'எல்லாத்தையும் இழந்துட்டு கஷ்டப்பட்டு நின்னப்போ, சொந்தக்காரங்க `கவலைப்படாதே, நாங்கல்லாம் இருக்கோம்'னு சொன்னாங்க. அந்த வாக்கியத்தைத்தான் என்னால் மறக்க முடியாது’ன்னாங்க. அப்படிப்பட்ட உறவுகளையெல்லாம் துண்டித்துவிட்டு எனக்கு மன அழுத்தமாக இருக்குன்னா என்ன செய்ய முடியும்?

    `மன அழுத்தத்தைப் போக்க டிப்ஸ் இருக்கா?’னு கேட்டா, இருக்கு. இது முழுவதும் வொர்க்அவுட் ஆகும்னு சொல்ல முடியாது. ஆனா, ஓரளவு நிச்சயம் சரிபண்ணும்'' என்று கூறிய கோபிநாத், சில டிப்ஸ்களையும் வழங்கினார்.

* சின்னச் சின்ன வேலைகளாக இருந்தாலும், அதைத் தள்ளிப் போடாதீர்கள். உடனுக்குடன் செய்து முடியுங்கள். இல்லையென்றால், அவை ஒவ்வொன்றாகச் சேர்ந்து பெரிய சுமையாக மாறி நிற்கும்.

* இன்றைக்கு மன அழுத்தம் தரக்கூடிய மிகப்பெரிய விஷயம், கடன். 'ஒரு காலத்தில் சேமிப்பில் வளருங்கள்' என்று சொன்னார்கள். 'இன்று கடனில் வளருங்கள்'னு சொல்கிறார்கள். ஒரு சதவிகிதம், இரண்டு சதவிகிதங்கிறதுக்கு ஆசைப்பட்டு கடன் வாங்காதீர்கள். வருமானத்துக்குள் செலவு செய்து வாழப் பழகுங்கள். திடுதிப்பென ஒரு போனஸோ, இன்சென்ட்டிவோ கிடைத்தால், உடனே அதைக்கொண்டு ஒரு கடனை அடைத்துவிடுங்கள். அது உங்களுக்கு பெரும் நிம்மதியைத் தரும். உளவியல்ரீதியாக உங்களுக்குத் தைரியம் கொடுக்கும்.

* உங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களாகச் செய்யுங்கள். பாதுகாப்பு தரக்கூடிய விஷயங்களைச் செய்யாதீர்கள்.

* என்ன ஆனாலும் சரி, 'ஞாயிற்றுக்கிழமை' என்பதை உங்களுக்காக வைத்துக்கொள்ளுங்கள்.

 * மனதை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தால், 24 மணி நேரமும், `வேலை... வேலை...’ என்று இருக்காதீர்கள்.அப்படிப்பட்டவர்களிடமிருந்து சிறந்த புராடக்ட் வருவதில்லை. '24 மணி நேரமும் கடினமாக உழைக்கணும் போராடணும், வெற்றியை நோக்கி நகரணும். எவர் கிவ் அப்', அப்படிங்கிறதெல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால், அதை ஒரு டைம் ஷெட்யூலுக்குள் கொண்டு வாங்க. 

* '24 மணிநேரமும் வேலை பாருங்க' எனச் சொல்கிறவர்கள் யாரும் அப்படிச் செய்வதில்லை. அவர்கள் காலையில் 'வாக்கிங்' போகிறார்கள். சன்டே ஃபேமிலியோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். வருடத்துக்கு ஒரு முறை டூர் போகிறார்கள். மாதத்துக்கொரு முறை சொந்தக்காரர்கள் கல்யாணத்துக்குப் போகிறார்கள். பிடித்த புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கிப் படிக்கிறார்கள். புதிய புதிய விஷயங்களை இன்னோவேட்டிவாகச் செய்து பார்க்கிறார்கள்.

*ரொம்ப சக்சஸ்ஃபுல்லாக இருக்கிறவர்களைப் பார்த்தால், அவர்களுடைய 'ஸ்டைல் ஆஃப் வொர்க்கிங்' வேறு மாதிரியாக இருக்கும். உடம்பையும் மனதையும் நல்ல நிலையில் தகுதியோடு வைத்துக்கொண்டு முழு ஈடுபாட்டுடன் ஒரு வேலையைச் செய்வார்கள். 5 மணிநேரத்தில் செய்யவேண்டிய வேலையை ஒரு மணி நேரத்தில் செய்து முடிப்பார்கள். அதைத்தான் வெற்றியாளர்கள் செய்கிறார்கள்.

* வாழ்தலின் அடிப்படை நோக்கமே வாழ்தல்தான். உங்களுக்கு வாழத்தெரியலைனா உங்களுக்கு ஆளவும் தெரியாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் உங்களால் வெற்றியாளராக இருக்க முடியும். ஆனால், வெற்றியாளராக இருந்தால்தான் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று தவறாகப் புரிந்துவைத்துக்கொண்டிருக்கிறோம்.

0 coment�rios: